புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், "ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு: எங்கள் பொது பொறுப்பு” என்ற கருப்பொருளுடன் கூடிய விழிப்புணர்வு வாரம் உறுதிமொழியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (27.10.2025) அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
"நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஊழலை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நான் நம்புகிறேன். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன். எனவே நான்
அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும், இலஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும், பொதுமக்களின் நலனுக்காகப் பணியாற்றுவேன் என்றும், தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும், ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்குத் தெரியப்படுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறேன்" என்ற உறுதிமொழியினை, மாவட்ட
ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் வாசிக்க அதனை பின்தொடர்ந்து, அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.அ.கோ.ராஜராஜன் அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.எஸ்.திருமால், உதவி ஆணையர் (கலால்) திரு.திருமால் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.



